Wednesday, August 24, 2016

பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.



ஓராண்டுக்கு முன்னால் நான் சந்தித்த பெண் ஒருவர் தன் மகள் குறித்து கடும் மனஉளைச்சலில் இருந்தார். 9 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுதான் அவரது கவலைக்கான காரணம். ஆனால் அவரது பதற்றம் அந்த கவலையை கற்பனைக்கெட்டாத எல்லைக்கு கொண்டு சென்றிருந்தது. அவள் கல்லூரி ஹாஸ்டலில் எப்படி தங்குவாள், திருமணத்தை எப்படி நடத்துவது என அடுத்த முப்பதாண்டுகளுக்கான கவலையை அவர் பட்டியலிட்டார்.

இது தொடர்பாக அவர் மருத்துவர்களை கலந்தாலோசித்திருக்கிறார். அவர் மகளுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஒரு மனநல ஆலோசகரை சந்தியுங்கள் எனவும் அவர் சந்தித்த மருத்துவர் சொல்லியிருக்கிறார். பிறகு அந்த சிறுமியிடம் பேசுகையில் இன்னொரு தீவிரமான சிக்கல் தெரியவந்தது. அவரது அப்பா தன் மனைவியை மிக மூர்க்கமாக தாக்கும் இயல்புடையவர். அடிக்கையில் மனைவி அறைக்குள் ஓடி ஒளியக்கூடாது என்பதற்காக உள்தள்பாளை கழற்றிவைக்கும் அளவுக்கு வன்முறை எண்ணம் கொண்டிருக்கிறார். மகளை அனேகமாக அவர் பொருட்படுத்துவதில்லை, மகள் படிக்கும் பள்ளி கட்டணம் அவரது தம்பி படிக்கும் பள்ளி கட்டணத்தைவிட 4 மடங்கு குறைவு. நொறுக்கு தீனிகூட அவர் மகனுக்கு மட்டுமே வாங்கித்தருகிறார். 

இவ்வளவு சிரமங்களை சந்திக்கும் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இங்கே நடந்திருப்பது இரண்டு பொருத்தமற்ற செயல்பாடுகள். ஒன்று அவர் தமது அச்சமூட்டக்கூடிய வாழ்க்கை சூழலின் பார்வையிலேயே தமது மகளின் எதிர்காலம் பற்றிய அனுமானங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார் அல்லது தமது நிகழ்கால பயத்தை மகளின் எதிர்காலம் பற்றிய கவலையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இன்னொன்று மகளின் பிரச்சினைக்கு காரணமானவற்றைப் பற்றி யோசிக்காமல் அதன் பின்விளைவுகளை மட்டும் மிகைப்படுத்தி கவலைப்படுவதன் மூலம் அவர் தன் மகளின் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்குகிறார் (சிறுமிக்கு அம்மாவை சிரமப்படுத்துகிறோம் எனும் கவலை அதிகமாக இருக்கிறது).

இது எல்லா பெற்றோருக்கும் பொருந்துகிற உதாரணம் அல்ல. ஆயினும் தங்களின் பிள்ளைகள் குறித்து மிகையான திட்டமிடல்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பெரும்பான்மை பெற்றோருக்கு இருக்கிறது. மேலும் ஒரு பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ளாமல் அதன் எதிர்வினையை இன்னொரு பிரச்சினையின் மேல் காட்டுவது என்பதையும் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். இவை இரண்டுமே ஒருவரது மன அழுத்தத்தை தூண்டக்கூடியவையே.

அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வொன்று பத்தில் ஒன்பது பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு தங்களுக்கு மன அழுத்தம் தரும் காரணி என தெரிவித்திருப்பதாக சொல்கிறது. பிள்ளைகளின் ரிடையர்ட்மெண்ட் காலம் வரைக்குமான கவலைகளை சுமக்கும் இந்திய பெற்றோருகளுக்கு இது இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.
இது தொடர்பாக பெரிய விவாதங்களுக்கு போவதற்கு முன்னால் சில எளிய மன அழுத்த மேலாண்மை வழிகளை பார்க்கலாம்.

என் குழந்தைகளுக்காவே நான் வாழ்கிறேன் எனும் எண்ணத்தை கைவிடுங்கள்.
தமிழ்நாட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வாசகம் இதுவாகவும் இருக்கலாம். சொல்பவர்களாலேயே நம்பப்படும் பொய் இது. உண்மையில் அடுத்தவர்களுக்காகவே வாழ்வதென்பது சாத்தியமில்லை (அது மகனாகவோ மகளாகவோ இருந்தாலும்). குழந்தைக்காக நீங்கள் வாழ்ந்தால் அவர்கள் அவர்கள் குழந்தைகளுக்காக வாழ்வார்கள். அப்படியானால் ஒருவரும் இங்கே அவர்களுக்காக வாழ முடியாது..
குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரி வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். குழந்தைகள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டுமென விரும்பினால் பெற்றோர்கள் தம் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொள்ளவதுதான் சுலபமான வழி. உங்கள் விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கேயான அடையாளத்துக்கு நேரம் ஒதுக்குங்கள். அப்படி தனிப்பட்ட அடையாளம் இல்லாத காரணத்தல்தான் பல பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் அடையாளமாக கருத ஆரம்பிக்கிறார்கள். பல சிக்கல்கள் அதில் இருந்துதான் துவங்குகிறது. 

“இது என் தவறு அல்ல” என்பதை நினைவில் வையுங்கள்.
பொதுவாகவே இந்திய பெற்றோர்களுக்கு தங்களால் சரியான முறையில் குழந்தைகளை வளர்க்க முடியவில்லையோ எனும் குற்ற உணர்வு இருக்கிறது. இது மிகையான செல்லம் கொடுப்பதிலோ அல்லது அதீத கண்டிப்பிலோ சென்று முடிகிறது. சில சமயம் அதீத கண்டிப்பு பிறகு அந்த குற்ற உணர்வில் அதிகப்படியான செல்லம் கொடுப்பது என இரண்டு எல்லைகளுக்கு செல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
குழந்தை வளர்ப்பு திறன் என்பது பிரீ லோடட் சாஃப்ட்வேர் அல்ல. குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் வளர்கிறார்கள். இதில் தவறுகள் வர 100 சதவிகிதம் சாத்தியம் உண்டு. செயல்பாடுகளை பரிசீலியுங்கள், தவறுகள் இருப்பின் குழந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள். குழந்தை வளர்ப்பில் தவறுகள் நடப்பது இயல்பானது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மாறாக 100% நேர்த்தியான பெற்றோராக இருக்க முயற்சித்தால் தோல்வியும் குற்ற உணர்வும்தான் மிஞ்சும். 

அதிக எண்ணிக்கையிலான நண்பர்களோடும் உறவினர்களோடும் தொடர்பை பராமரியுங்கள்.
ஒரு பெரிய குழுவோடு இருக்கையில் நாம் இயல்பாகவே பாதுகாப்பாய் உணர்வோம். நமக்காக செய்துகொள்ளும் செயல்களைக்காட்டிலும் அடுத்தவர்களுக்காக செய்யும் உதவிகளே அதிகம் மகிழ்ச்சியளிக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள். உங்கள் பிள்ளைகளை நம்பிக்கையோடு விட்டுச்செல்லும் அளவுக்கு நெருக்கமான நண்பரோ உறவினரோ அருகாமையில் இருந்தால் குழந்தைகள் பற்றிய உங்கள் பதற்றத்தில் பாதியை குறைக்கலாம். உங்கள் கவலைகளை பகிர்ந்துகொள்ள போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இருந்தால் அதனை நாம் தேவையற்ற இடங்களிலும் தேவையற்ற வழிகளிலும் வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம்.
இதன் மூலம் பல்வேறு இயல்பு கொண்ட மனிதர்களோடு உரையாடவும் பழகவும் உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். உண்மையில் இந்த அனுபவம்தான் கல்வியைவிட அவர்கள் எதிர்காலத்துக்கு அதிகம் பயன்படும்.
மேலும் உங்கள் குழந்தைகளின் சக மாணவர்களின் பெற்றோரோடு ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி உடல்நலத்துக்கு மட்டுமானதல்ல..
தினமும் உடற்பயிற்சி செய்வது உங்கள் மனநலத்தை மேம்பட்டுத்தும். மனிதர்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் உயிர் வேதியல் மாற்றங்கள் உடற்பயிற்சி செய்வதால் நிகழ்கின்றன. மேலும் உடல் வலுவாக இருப்பவர்கள் பலவீனமானவர்களைவிட அதிகம் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள முடியும். 

மற்ற பெற்றோரோடு உங்களை ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.
இங்கே குழந்தைகள் தொடர்பான முடிவுகள் பலவும் பிறரோடு ஒப்பிடுவதன் மூலம் எடுக்கப்படுகின்றன. பொம்மைகள் தொடங்கி கல்லூரி தெரிவுவரை இந்த ஒப்பீடு நீள்கிறது. இது தேவையற்றது.
பிறரது முடிவுகள் அவரது சூழல் மற்றும் அறிவு ஆகியவ்ற்றைக் கொண்டு எடுப்பப்படுபவை, அவை நமக்கும் பொருந்த வேண்டும் என அவசியமில்லை. இன்னொன்று அவர் ஏதோ ஒரு அம்சத்தில் சிறந்த தகப்பனாகவோ தாயாகவோ இருந்தால் நீங்கள் வேறொரு அம்சத்தில் சிறந்தவராக இருப்பீர்கள். ஆகவே பிறரோடு ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ அல்லது முடிவுகள் எடுக்கவோ அவசியமில்லை.

தீர்மானமான நீண்டகால இலக்குகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.  அதாவது மகனை அல்லது மகளை மருத்துவர் ஆக்குவது அல்லது I.A.S ஆக்குவது போன்ற தீர்மானங்களை திட்டங்களை வைத்திருப்பது. எதிர்கால மகிழ்ச்சிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது இன்றைய மகிழ்ச்சி. இத்தகைய மிகத் தீர்மானமான இலக்குகள் உங்கள் இன்றைய மகிழ்ச்சியை சிதைக்கும் வாய்ப்புக்கள் அதிகம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு சிறப்பான முடிவாக தோன்றியது இன்று சாதாரணமாகவோ அல்லது தவறாகவோ தோன்றலாம். காலமும் அனுபவமும் நமது விருப்பங்களிலும் லட்சியங்களிலும் மாற்றங்களை செய்துகொண்டே இருக்கும். அதனால் நீண்டகால இலக்குகளை மீளாய்வு செய்யுங்கள், கூடுமானவரை அவற்றை கைவிடுங்கள்.

சரியான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள்.
எல்லோருக்கும் பொருந்தக்கூடிய டயட் என்று ஒன்று இல்லை. ஆனால் பொதுவாக சொல்லப்படும் உணவுப்பழக்க ஆலோசனைகளை உங்களுக்கு உகந்த வழிகளில் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். சைவ உணவு  மன அமைதியை உருவாக்கும் என சொல்லப்படுவதெல்லாம் பொய். உண்மையில் சைவ உணவுக்காரர்களுக்குத்தான் மன அழுத்தம் வர சாத்தியம் அதிகம். மன அழுத்தத்தை குறைக்க பரிந்துரைக்கப்படும் உணவுகளில் மாட்டு ஈரலும் ஒன்று. வாழைப்பழம் மற்றும் பச்சைத் தேநீர் ஆகியவை சிறந்த பதட்ட குறைப்பு உணவுப் பொருட்கள். அவற்றையும் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இவையெல்லாம் பெரும்பான்மை தமிழக(இந்திய) பெற்றோர்களுக்கு ஓரளவுக்கு பொருந்திப்போகும் ஆலோசனைகள். இவை அனைத்தும் அனைவருக்கும் பயன்படும் என கருத இயலாது. இவற்றை தாண்டி எழும் சிக்கல்களை ஒரு சரியான வல்லுனரை கலந்தாலோசிப்பதன் வாயிலாக நிர்வகிக்க முடியும். பெற்றோராக இருப்பது ஒரு 24 மணிநேர வேலை. இதில் மன அழுத்தமே இல்லாமல் வாழ்வது சாத்தியம் இல்லை. பதட்டம் என்பது ஓரெல்லைவரை நன்மை பயக்கக்கூடியதே. ஆகவே மன அழுத்தம் இல்லாத வாழ்வை விரும்புவதைக்காட்டிலும் அதனை சரியாக நிர்வகிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதுதான் நேர்மறையான பெற்றோருக்கு தேவை.

No comments:

Post a Comment